உலகெங்கிலுமுள்ள காதலர்களுக்கு எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
இன்று உலகெங்குமுள்ள காதலர்கள் காதலர் தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
இந்நாளில் காதலர்கள் தங்களுக்கிடையில் அன்பைப் பகிர்ந்து கொள்வதும், பரிசுப் பொருட்களைப் பரிமாரிக் கொள்வதும் சிறப்பம்சமாகும். அதிலும் இம்முறை காதலர் தினம் ஞாயிற்றுக் கிழமை வந்திருப்பதால் விசேட நிகழ்ச்சிகளையும், களியாட்டங்களையும் பற்றிக் குறிப்பிடவே தேவையில்லை.
அத்தோடு இதுவரை காதலியோ, காதலனோ கிடைக்காதவர்கள் தங்களுக்கேற்றவர்களை தேடிக் கொள்வதற்கும் இந்நாளைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இத்தினமானது ரோமில் வாழ்ந்த கிறிஸ்துவ தியாகியான வெலன்டைன் என்பவரின் நினைவாகக் கொண்டாடப்படுவதால் வெலன்டைன்ஸ் டேய் என்றும், காதலர்களே இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் தினம் என்று அழைக்கப்படுகின்றது.
.இக்காதலர் தினம் உருவானமை தொடர்பாக பல கதைகள் கூறப்பட்டாலும் பிரதானமாகச் சொல்லப்படும் கதை இதுதான்.
3ம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த வெலன்ரைன் என்பவருக்கு ரோமை ஆண்ட கிளாடியஸ் என்ற மன்னனின் ஆட்சியைப் பிடிக்கவில்லை.வெலன்ரைனுக்கு மட்டுமல்லாமல் அந்நாட்டில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும் இம்மன்னனின் ஆட்சி பிடிக்கவில்லை. திருமணமான ஆண்களுக்கு தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு அரச படையில் இணைய விருப்பமிருக்கவில்லை. இதை அறிந்த மன்னன் ஆண்கள் திருமணம் செய்யாதுவிட்டால் படையில் இணைந்து கொள்வார்கள் என்பதற்காக ஆண்களைத் திருமணம் செய்யாது தடுப்பதற்காக சட்டமொன்றை உருவாக்கினான்.
அச்சட்டத்தை வெலன்ரைன் முற்றாக நிராகரித்தார். தவிரவும் தன்னைத் தேடிவரும் இளைஞர்களுக்கு இரகசியத் திருமணமும் செய்துவைத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. சிரையிலிருந்த வெலன்ரைன் சிறை அதிகாரியின் மகளின் காதலில் விழுந்தார்.
கி.பி.269 ஃபெப்ரவரி 14ம் திகதியன்று தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென்று தெரிந்துகொண்ட வெலன்ரைன் சிறை அதிகாரியின் மகளுக்கு “உங்கள் வெலன்ரைனிடமிருந்து காதல்” (Love From Your Valantine) என்று குறிப்பொன்றில் எழுதிக் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார்.
அன்றைய நாளே இன்றுவரை வெலன்ரைன் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் தமது காதலைப் பறிமாறிக் கொள்வதும், தமது காதலை நினைவுபடுத்தும் முகமாக பரிசுப் பொருட்களை வழங்குவதும் வழக்கமாகிவிட்டது.
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த செல்வி எஸ்தர் ஹோலன்ட் என்பவர்தான் முதல் வெலன்ரைன் அட்டையை அனுப்பியவராம்.
ரோமச் சக்கரவர்த்தி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காதலர் தினம் ரோம் அரசி யூனோவைக் கெளரவிக்குமுகமாக ஃபெப்ரவரி 14 இல் விடுமுறை தினமாக்கப்பட்டதாகவும், ரோமர்கள் யூனோவைப் பெண் தெய்வம் என்றும், திருமணங்களுக்கான தெய்வம் என்றும் கருதியதால் ஃபெப்ரவரி 15 ஐ பெரிய விழாவாகக் கொண்டாடுவதாகவும் ஒரு தகவல் உண்டு.
ஃபெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் வழக்கம் முன்னரைவிட அண்மைய காலங்களில்தான் அதிகரித்து வருகின்றது. வானொலி, தொலைக் காட்சிகளில் காதல் வாரம் என்று கொண்டாடப்படும் அளவிட்கு காதலர் தின மோகம் அதிகரித்துவிட்டது.
காதலெனும் கடலில் மூழ்கி எழாதவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். சிலர் மூழ்கி கரை சேர்ந்திருக்கிறார்கள், சிலர் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் சிலர் மூழ்கியே போயிருக்கிறார்கள்.
தமது காதல் வெற்றி பெறும் பட்சத்தில் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்லும் இளைஞர்கள், காதல் தோல்வியென்றதும் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று தம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.
காதல் என்பது மிகவும் புனிதமான ஒரு உறவு. இனிமையான உணர்வு, வர்ணமயமான உலகம்.
இப்படிப்பட்ட காதலின் புனிதத் தன்மையை இன்றைய இளைஞர்கள் பேணுகின்றார்களா என்றால் அது சந்தேகத்துகுரியதே.
பெரும்பாலான இளைஞர்கள் காதலை ஒரு பொழுது போக்காகவே கருதுகிறார்கள்.
கடற்கரை, பார்க், பொது இடங்கள் என்று எல்லா இடங்களிலும் காதலர்கள் அநாகரீகமாக நடந்துகொள்கின்றார்கள். இவற்றினால்தான் பெரியவர்கள் காதலின் மீது வெறுப்புக் கொள்கின்றார்கள்.
அன்று காதல் உள்ளத்திலிருந்து உணர்வுபூர்வமாக வெளிப்பட்டது. ஆனால் இப்போது காதல் பொழுது போக்காக மாறிவிட்டது.
கண்டதும் காதல், பார்க்காமலே காதல், செல்போன் காதல் என்பவற்றையெல்லாம் தாண்டி இப்பொழுது ஃபேஸ்புக் காதல், ஹை 5 காதல் என்று தொழில்நுட்பத்தோடு சேர்ந்து காதலின் தன்மையும் மாறிக் கொண்டு செல்கின்றது.
காதலிக்கும் போது தம்மையும் மறந்து காதலிப்பதால் பல சமூக கலாச்சார சீரழிவுகள் ஏற்படுவதுடன், காதலர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது.
காதலின் புனிதத் தன்மையைப் பேணுவதுடன், கட்டுக் கோப்புடன் காதலித்தால் வளமான எதிர்காலம் நிச்சயம் கிட்டும்.
காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் Gud Luck.