RSS
நான் மனம் நெகிழ்ந்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நான் மனம் நெகிழ்ந்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என்னை மிகவும் பாதித்த குட்டிக் கதை



ஒரு மனிதன் தனது வேலை முடிந்து தாமதமாகவும் மிகுந்த களைப்பு,எரிச்சலுடன் வீடு வந்த போது தனது 5 வயது மகன் வாசலில் தனக்காக காத்திருப்பதைக் கண்டான். இருந்தும் அவன் அதைப் பொருற்படுத்தாமல் உள்ளே வந்து கதிரையில் அமர்ந்த போது.
 மகன் தந்தையைப் பார்த்து.

மகன் : அப்பா நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா..?

தந்தை : கேளு என்ன விசயம்..?
மகன் : அப்பா நீங்க ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு பணம் சம்பாதிப்பீங்க..?

தந்தை : இது உனக்கு தேவையில்லாத விசயம். ஏன் நீ இப்படியான கேள்விகள என்கிட்ட கேற்கிறாய்..?
(தந்தை ஆவேசமாகக் கேட்டார்)

மகன் : நான் தெரிஞ்சு கொள்ளனும்.  தயவு செய்து சொல்லுங்கப்பா.. ஒரு மணித்தியாலத்திற்கு நீங்க எவளவு காசு உழைப்பீங்க…?

தந்தை : நீ கட்டாயம் தெரிஞ்சுக்கனுமா..? சரி நான் ஒரு மணித்தியாலத்திற்கு 100/= சம்பாதிப்பன்

மகன் : ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ்..
(
என்று கவலையோடு தலையைக் குனிந்தான் அந்த சின்னப் பைய்யன்)
சிறிது மெளனத்தின் பின்னர்.
 அப்பா தயவுசெய்து எனக்கு ஒரு 50/= கடனாகத் தரமுடியுமா…?


தந்தைக்கு ஆத்திரம் அதிகரித்தது.
அப்போ நீ என்கிட்ட 50/= காசு வாங்கி வீணான விளையாட்டுப் பொருள் அல்லது தேவையில்லதா செலவு செய்யத்தான் இதெல்லாம் கேட்டிருக்காய் என்ன..? நீ எப்படி இப்படி சுயநலவாதியாய் மாறினாய்..? இந்த மாதிரி அற்ப விசயங்களுக்காகவா நான் இவளவு கஸ்ட்டப்பட்டு உழைக்கன்..?”

போ.. பேசாம உன் ரூமுக்குப் போய் தூங்கு போ..”
(
தந்தை ஆவேசாமாகக் கத்தினார்)

அந்தச் சின்னப் பைய்யனும் மிகுந்த கவலையோடு தலை குனிந்தபடியே தனது அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டான்.


 அவனுக்கு காசு வேண்டுமென்பதற்காகஅவன் எப்படி இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்கலாம்..?
மகனின் கேள்வியை நினைத்து தந்தைக்கு கோவம் உச்சத்தில்.


சில மணிநேரத்தின் பின் தந்தையின் கோவம் குறைந்தது. சிந்திக்கலானார்.
அவன் ஏன் காசு கேட்டான்..? அவன் அடிக்கடி என்னிடம் காசு கேட்டு கஸ்ட்டப்படுத்துவதில்லையே.. இப்போது காசு கேட்டிருகிறான் என்றால் நிச்சயமா அவனுக்கு ஏதோ முக்கியமான தேவை ஒன்றிருக்கு. அதனாலதான் அவன் 50/= கேட்டிருக்கிறான்.

இப்படி அமைதியாக யோசித்த தந்தை. நேரே தனது மகனின் அறைக்குச் சென்று மூடியிருந்த கதவைத் திறந்தார். கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்து

மகன்.. தூங்கிட்டீங்களா….?தந்தை கேட்டார்.


இல்லப்பாமுழிச்சிட்டுதான் இருக்கன்மகனின் பதில்.

நான் யோசிச்சு பாத்தன் மகன், நான் உங்ககிட்ட ரொம்பக் கோவமா நடந்துக்கிட்டன், ஒஃபீஸ்ல நிறைய வேலை, வீட்டுக்கு வருவதற்குக் கூட தாமதம், அந்தக் கோபத்த நான் உங்கமேல காட்டிட்டன். கவலப்படாதீங்க. இந்தாங்க நீங்க கேட்ட 50/=.

என்று அன்பொழுகப் பேசிய தந்தை தனது சட்டைப் பையிலிருந்து 50/= பணத்தை எடுத்து மகனிடம் கொடுத்தார்.

மகிழ்சியோடு தன் தந்தையைப் பார்த்த மகன் 
ஆஹ்ரொம்ப நன்றிப்பா” 

என்று குதூகலத்துடன் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டான்.

பின்னர் தனது தலையணைக்கு கீழே கைய்யைப் போட்டு கசங்கிய நிலையில் கிடந்த சில காசுத்தாள்களையும், நாணயக் குற்றிகளையும் எடுத்தான்.
ஏற்கனவே தன் மகனிடம் காசு இருப்பதைக் கண்ட தந்தைக்கு மீண்டும் கோவம் வந்தது.

ஆனால், அந்த சின்னப் பையனோ  தனது கைய்யிலுள்ள பணத்தை மெதுவாக எண்ணினான்.
எண்ணி முடிந்ததும் நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தான்.


ஏற்கனவே உன்கிட்ட காசு இருக்கு. அப்படி இருக்கும் போது ஏன் என்கிட்ட மேலதிகமா காசு கேட்டாய்” 
தந்தை கோபத்தோடு கேட்டார்.

ஏன்னா என்கிட்ட முதல்ல இருந்த காசு போதாது. ஆனா இப்போ சரியா இருக்கு

என்று சொன்ன அந்தச் சின்னப்பயன் தன் தந்தையை நோக்கி வந்து அவர் முன்னே நின்று

அப்பாஇதோ என்னிடம் 100/= இருக்கு. இதை வாங்கிக்கிட்டு உங்க நேரத்துல 1 மணித்தியாலத்தை எனக்குத் தரமுடியுமா…?” 
என்று கேட்டான்.
சில கண அமைதிக்குப் பின்னர் பையன் தொடர்ந்தான்.

அப்பா தயவு செய்து நாளைக்கு வீட்டுக்கு நேரத்தோட வாங்கப்பாஉங்க கூட இரவுச் சாப்பாட்ட சாப்பிடனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசைப்பா..
என்று கெஞ்சும் குரலில் கூறிய அவன் தனது கையிலிருந்த 100/= ஐ தன் தந்தையிடம் நீட்டினான்.

மகனின் வார்த்தைகளைக்கேட்ட தந்தை உடைந்தே போனார். தன் சின்ன மகனை அப்படியே தனது இரு கரங்களாலும் அள்ளி எடுத்து முத்தமிட்டார். தனது பிழைக்காக மகனிடம் கெஞ்சி மன்னிப்புக்கேட்டார்.

தந்தையின் கண்ணீரால் மகனின் உடல் நனைந்தது.



***
இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருப்பவர்களுக்கான ஒரு சிறிய நினைவூட்டல் இது. தொழிலுக்காக,பணத்துக்காக எமது நேரத்தை செலவிடும் நாங்கள். எம்மீது பாசம் வைத்திருப்பவர்களோடு பழக,பேச நேரத்தை ஒதுக்க முயற்சிப்பதில்லை.

நாங்கள் எவ்வளவுதான் கஸ்ட்டப்பட்டு உழைத்தாலும் நாளைக்கு நாங்கள் இறந்தபின் நாம் வேலை செய்த நிறுவனம் நஸ்ட்டப்படுவதும் இல்லை இழுத்து மூடப்படுவதுமில்லை. நமது இடத்திற்கு வேறொருவரைப் பிரதியிட்டு அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்கும்.

ஆனால் நமது குடும்பமும் உறவுகளும் நமது இழப்பினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நமது இழப்பானது அவர்கள் மரணிக்கும் வரை ஒரு பேரிழப்பாகவே இருக்கும்.

வாழ்கைக்கு பணம் தேவைதான் ஆனால் பணமே வாழ்க்கையல்ல..







Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதுதான் மனிதம் (என்னை நெகிழ வைத்த சம்பவம்)

இதுதான் மனிதம் (என்னை நெகிழ வைத்த சம்பவம்)

அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார் 

இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள்

அந்தத் தந்தை சொன்னார்
நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” 
அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

”ஒரு நாள் மதிய வேளையில் நானும் என் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து என்னிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”


எனக்கு என் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்கவே தயக்கமாக இருந்தாலும்  அவர்களிடம் கேட்டுவைப்பதில் தவறில்லை என்று எண்ணினேன். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டேன்.

என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?

அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக என்னிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”

அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த எனக்கு மனம் நிறைந்தது. ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.


பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு பந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும். 

ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச;  ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தை அவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான்.

முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.

மைதானத்தில் ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு என்ற சத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..

நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட எனது கண்களில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்  போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர்.அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது. 
என்று கண்ணீர் மல்க,விம்மிய குரலில் சொல்லி முடித்தார் அந்தத் தந்தை

அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.


இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச் செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.

இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம்  முயற்சிப்போமா?

** சகோதரர் ஒருவர் தனக்கு வந்த மின்னஞ்சல் என்று சொல்லி அவரது ஃபேஸ்புக் குறிப்பில் இட்டதை நான் படித்த போது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது,மனதை உருக்கிவிட்டது. அதை உங்களோடும் பகிர்ந்திருக்கிறேன்.
நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்...?






Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS